Thursday, November 10, 2011

தரமான கற்பித்தலுக்கான செயல்நிலை ஆய்வு Qualitative Learning Action Research


இலங்கையில் ஆரம்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக "ஆரம்பக் கல்வியின் தர மேம்பாட்டுக்காக செயல்நிலை ஆய்வு முறையைப் பயன்படுத்துதல் எனும் வேலைத் திட்டம் 2009ஆம் ஆண்டு யுனிசெப் அனுசரணை யுடன்  இலங்கை தேசிய கல்வி நிறுவக ஆரம்பக் கல்வித் துறையினரால் அறிமுகம் செய்யப்பட்டது.


  
2011 ஆம் ஆண்டு யுனிசெவ் அனுசரணையுடன்  தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தரமான கற்பித்தலுக்கான செயல் நிலை ஆய்வு எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட ஆய்வுகளிலிருந்து மூன்று ஆய்வுகள்  குறும் படங்களாக்கப்பட்டன. இரண்டு குறும்படங்கள் சிங்கள மொழியிலும் ஒரு குறும்படம்  தமிழ்மொழியிலும் யுனிசெப் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டன.

ஆரம்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக செயல்நிலை ஆய்வுமுறையினூடாகப் பின்வரும் நோக்கங்களை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.

1. வகுப்பறையில் கல்வி கற்றல்-கற்பித்தல் சூழலை உருவாக்குதல்.

2. ஆசிரியர்களினதும்  அதிபர்களினதும் ஆசிரிய ஆலோசகர்களினதும் பணியாற்றுகையை அபிவிருத்தி செய்தல்.

3. தமது வாண்மைத்துவம் தொடர்பான நல்ல மனப்பாங்குகளை  பங்குபற்றுவோரிடத்தே ஏற்படுத்துதல்.

4. நாளாந்தம் வகுப்பறையில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் தமக்கே உண்டு என்பதையும் அது தமது பொறுப்பாகும் என்பதையும் பங்குபற்றுவோருக்கு உணர்த்துதல்.

5. கல்வி வாண்மையாளரிடத்தே பாடசாலை மட்டத்தில் ஒத்துழைப்பு அணுகுமுறையொன்றினை ஏற்படுத்துதல்.

6. தமது வாண்மை சார்பாக நாளாந்தம் தோன்றும் பிரச்சினைகள் தொடர்பானஉணர்வை பங்குபற்றுவோரிடத்தே ஏற்படுத்துதல்.

7. புதியன பிறப்பித்தல் எனும் அணுகுமுறையினூடாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு பங்குபற்றுவோரை வழிப்படுத்துதல்.
 
செயல்நிலை ஆய்வு பின்னணி

இரண்டு வருட காலப்பகுதியில் செயல்ரீதியில் மேற்கொள்ளப்பட்ட செயல்நிலை ஆய்வுச் செயன் முறையொன்றின் அறிக்கை இவ்வாறு முன்வைக்கப்பட்டது. முதலில் பாடசாலையில் வகுப்பறையுடன் இணைந்திருக்கும் ஆசிரியர்,  அதிபர்,  ஆசிரிய ஆலோசகர் ஆகியோரின் வாண்மைத் தேர்ச்சியை மேம்படுத்தும் நோக்குடன் செயல்நிலை ஆய்வு முறையினை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. 
 
இரண்டாவதாக மாகாண மட்டத்தில் குழுக்களைத் தெரிவு செய்து செயல்நிலை ஆய்வு முறையினை அறிமுகப்படுத்துவதற்கான பயிற்சிச் செயலமர்வுகள் நடத்தப்பட்டன. அச்செயலமர்வுக்காக துறைசார் வளவாளர் அணியொன்றின் பங்களிப்பும் பெறப்பட்டது. 

மூன்றாம் படிமுறையாக பயிற்சி பெற்ற அனைவரும் செயல்நிலை ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் ஆய்வுச் செயன்முறையில் ஈடுபட்டிருந்த வேளை அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளும்,  வழிகாட்டல்களும், தூண்டுதல்களும் தேசிய ஆய்வு அணியினரின் நேரடித் தலையீட்டின் மூலம் வழங்கப்பட்டது. 

 நான்காவது படிமுறையாக அவர்களின் ஆய்வு அறிக்கைகளும் ஆழ்சிந்தனை வெளிப்பாடு அதாவது பிரதிபலிப்பு நாட்குறிப்பேடுகளும் (ஜேர்னல்) தேசிய கல்வி நிறுவகத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

  ஐந்தாவது படிமுறையாக ஆய்வு அறிக்கைகள், ஆழ்சிந்தனை வெளிப்பாடுகள் அடங்கிய நாட்குறிப்பேடுகள் வாசிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டன. பின்னர் தேசியமட்டத்தில் அறிமுகப் படுத்துவதற்குத் தகுதியான ஆய்வு அறிக்கைகள், அதற்கெனத் தயாரிக்கப்பட்ட நியமங்களுக்கேற்ப தெரிவு செய்யப்பட்டன. இப்பணிக்காக வளவாளர்களின் பங்களிப்பு பெறப்பட்டது. 
 
ஆறாவது படிமுறை இறுதி அறிக்கையைத் தயாரித்தலாகும். 
இந்த அறிக்கை முக்கியமான மூன்று பகுதிகளைக் கொண்டதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலாம்பகுதியில் தேசிய கல்வி நிறுவக, செயற்றிட்ட அணியின் ஆய்வு அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதியில் தேசிய கல்வி நிறுவகத்துக்கு ஆய்வு அறிக்கையை அனுப்பி வைத்த அனைவரினதும் தகவல்கள் சுருக்க அறிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பகுதியில் தேசிய மட்டத்தில் அறிமுகப்படுத் துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட செயல்நிலை ஆய்வு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு அறிக்கைகள் இத்துறையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், கல்வி ஆய்வாளர்கள், மற்றும் கல்வித்துறையில்; ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பயனளிக்கக் கூடியதொன்றாகும் 

சிறப்பான  வெற்றி
செயல்நிலை ஆய்வு முறைமையானது தமது நாளாந்தப் பணிகளுக்குத் தடையாகஅமையாத, தமது பணிகளை மேம்படுத்துகின்ற ஒருசெயல்முறையாகும் என்பதையும் ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், விளங்கிக் கொண்டமை இப்பணியின் சிறப்பான ஒரு வெற்றியாகும். இம் மனப்பாங்கானது அவர்களை மேன்மேலும் கற்றல் – கற்பித்தல் செயன்முறை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக செயல்வழி ஆய்வு முறையைப் பயன்படுத்தத் தூண்டும். எனவே இந்த செயல்நிலை ஆய்வு முறையியலானது ஆரம்பக்கல்வியில் ஈடுபடுவோருக்கு மட்டுமன்றி, கல்வித்துறையில் ஈடுபடும் அனைவரும் பயன்படத்தக்க ஓர் முயற்சியாகும்.

குறிப்பு : நான்   இலங்கை தேசிய கல்வி நிறுவக முன்பிள்ளைப் பருவ விருத்தி மற்றும் ஆரம்பக்கல்வித்துறையில் செயற்றிட்ட அதிகாரியாகப் பணியாற்றுவதாலும் இச் செயல்நிலை ஆய்வுச் செயற்றிட்டத்தில் பங்காற்றியவன் என்பதாலும் இத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்த ஆய்வு நூலை  PDF முறையில் சேமிக்க, நகலெடுக்க இங்கு அழுத்துங்கள்.





செயல் நிலை ஆய்வுக் குறும்படங்கள் அடுத்த பதிவில்

1 comment:

  1. தரமான கற்பித்தலுக்கான செயல்நிலை ஆய்வு I cant download this book?

    ReplyDelete

பூக்கள் என்றாலே கொள்ளை அழகுதான்!

பூக்கள் என்றாலே கொள்ளைஅழகுதான் . சுற்றுச்சூழலை சுற்றுப்புறச்சூழலை அழகுபடுத்துவதில் பூக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன . நோய் தீர்க்க...